சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வு பெறப்போவது எப்போது..? - சிறுவயது பயிற்சியாளர் கருத்து

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

Update: 2024-10-08 10:30 GMT

Image Courtesy: AFP

மும்பை,

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர். அதேசமயம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதாகவும் அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக தோனிக்கு பிறகு ஐ.சி.சி கோப்பையை பெற்று தந்த ரோகித் இன்னும் சில கோப்பைகளை பெற்று தர வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் 37 வயதாகும் ரோகித் சர்மா எப்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார்...? என்பது குறித்து ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளரான தினேஷ் லாட் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்று முடிந்தவுடன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில் தற்போது அவருக்கு வயது அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் காரணமாக அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து நிச்சயமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வுபெற அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவார்.

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலககோப்பையில் விளையாடிவிட்டு இந்திய அணிக்காக அந்த கோப்பையை கைப்பற்றி கொடுத்த பிறகு அவர் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வை அறிவிப்பார். ஆனால் தற்சமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் முடிவோடு அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவார் என்று நான் நினைக்கிறேன் என தினேஷ் லாட் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்