விராட் கோலி ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்றால் இத்தனை கோடிக்கு செல்வார் - ஏலதாரர் ஹூக் எட்மீட்ஸ்

ஸ்டார்க், கம்மின்ஸ் போன்வர்களை விட விராட் கோலி அதிக மதிப்பு மிக்கவர் என்று ஹூக் எட்மீட்ஸ் கூறியுள்ளார்.

Update: 2024-08-13 09:23 GMT

image courtesy: AFP

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சம் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். இருப்பினும் அந்த விதிமுறையை மாற்றியமைத்து 7 - 8 வீரர்களை தக்க வைக்க அனுமதிக்குமாறு பி.சி.சி.ஐ.யிடம் ஐ.பி.எல். அணிகளின் நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. முன்னதாக கடந்த வருடம் துபாயில் 2024 சீசனுக்கான மினி ஏலம் நடைபெற்றது.

அதில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார். அதனால் ஐ.பி.எல். வரலாற்றில் ரூ.20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மிட்சேல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டார். அதன் வாயிலாக ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு விலை போன வீரர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நேரடி ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்றால் ரூ.30 கோடிக்கு மேல் விலை போவார் என ஏலதாரர் ஹூக் எட்மீட்ஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்ற வெளிநாட்டவர்களை விட விராட் கோலி அதிக மதிப்பு மிக்கவர் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலியை ஏலத்தில் அழைப்பது மிகவும் அற்புதமான கவுரவமாக இருக்கும். விலையைப் பொறுத்த வரை அவர் ரூ.30 கோடிக்கு மேல் செல்வார் என்று நான் நினைக்கிறேன். ஏலத்தில் பலமுறை இளம் இந்திய வீரர்களை வாங்க ஐபிஎல் அணிகள் போரிட்டுள்ளன. எடுத்துக்காட்டாக வருண் சக்கரவர்த்தியை சொல்லலாம். 2019 ஏலத்தில் ரூ.20 லட்சம் அடிப்படை விலையில் கலந்து கொண்ட அவர் கடைசியில் ரூ. 8.40 கோடிக்கு சென்றார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்