இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த இந்திய வீரர் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார் - இங்கிலாந்து முன்னாள் வீரர்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2வது அரையிறுதி ஆட்டத்தில் மோத உள்ளன.

Update: 2024-06-26 09:49 GMT

Image Courtesy: AFP

லண்டன்,

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் முதலாவது அரையிறுதி ஆட்டத்திலும், இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2வது அரையிறுதி ஆட்டத்திலும் மோத உள்ளன.

இந்திய நேரப்படி முதலாவது அரையிறுதி ஆட்டம் நாளை காலை 6 மணிக்கும், 2வது அரையிறுதி ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா வீசப்போகும் 24 பந்துகளில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் பால் காலிங்வுட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

உண்மையாக இம்முறை இந்தியா தோல்வியை சந்திப்பதை பார்க்க முடியாது. அவர்களை தோற்கடிக்க இங்கிலாந்து எதையாவது அற்புதமான விஷயத்தை செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியா சமநிலையுடன் கூடிய அணியை கொண்டுள்ளது. ஜஸ்ப்ரித் பும்ரா தற்போதைய பார்மில் உள்ளார். பிட்டாக, துல்லியமாக, வேகமாக வீசக்கூடிய அவரிடம் உயர்தரமான திறன் இருக்கிறது. அவரை எதிர்கொள்ள எந்த அணியிடமும் பதில் இருப்பதாக தெரியவில்லை.

120 பந்துகள் கொண்ட இப்போட்டியில் பும்ரா போன்றவர் 24 பந்துகளில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார். அமெரிக்காவில் இருந்த கடினமான பிட்ச்களில் கூட இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங்ஸ் விளையாடிய ரோகித் சர்மா போன்ற இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேன் பார்முக்கு வந்துள்ளார். 2 அணிகளுமே ஆக்ரோஷமான செயல்முறைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளன.

ஒருவேளை கயானா பிட்ச் பிளாட்டாக இருந்தால் இங்கிலாந்தின் கை ஓங்கியிருக்கும். ஒருவேளை அது ஸ்லோவாக இருந்தால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் தற்போது இந்தியாவின் அணுகுமுறை மாறியுள்ளது. மெதுவாக விளையாடும் திட்டம் உலகக் கோப்பையை வென்று கொடுக்காது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

எனவே அவர்கள் சுதந்திரமாக ரிஸ்க் எடுத்து தைரியமாக விளையாட வேண்டும். அது தோல்வியை கொடுத்தால் விமர்சனங்கள் ஏற்படும். ஆனால் உலகக்கோப்பையை வெல்வதற்கு நீங்கள் மற்ற அணிகள் செய்வதை விட முன்னோக்கி செயல்படுவதற்கு உங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்