இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; ஸ்பின் பவுலிங் செய்த கிறிஸ் வோக்ஸ்... சிரித்த ஜோ ரூட் - வீடியோ

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-09-08 06:34 GMT

லண்டன்,

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 6ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆலி போப் 154 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 45 ஒவர்களில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இன்னும் 114 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்றைய 2ம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை பேட்டிங் செய்ய வந்த போது மழை பெய்வது போன்ற சூழ்நிலை நிலவியது. அந்த சூழ்நிலையில் இலங்கை பேட்டிங் செய்ய துவங்கியது. இருப்பினும் இலங்கை பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆட்டத்தின் 7வது ஓவரில் மேகக் கூட்டங்கள் வந்ததால் போதுமான வெளிச்சம் கிடைக்கவில்லை. அதனால் ஒன்று ஸ்பின்னரை வைத்து போட்டியை தொடருங்கள் இல்லையேல் போட்டி நிறுத்தப்படும் என்று இங்கிலாந்து கேப்டன் போப்பிடம் நடுவர் கூறினார்.

மறுபுறம் ஏற்கனவே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் அந்த ஓவரின் 2 பந்துகளை வீசி முடித்திருந்தார். எனவே மீதி 4 பந்துகளை நீங்கள் ஸ்பின் பவுலிங்கில் போடுகிறீர்களா? என்று அவரிடம் கேப்டன் போப் கேட்டார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து எஞ்சிய 4 பந்துகளை ஆப் ஸ்பின் பந்துகளாக வீசினார்.

145 - 150 கிலோமீட்டர் வேகத்தில் அதிரடியாக வீசக்கூடிய கிறிஸ் வோக்ஸ், திடீரென ஸ்பின்னராக மாறி பந்து வீசியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக ஸ்லிப் பகுதியில் நின்ற ஜோ ரூட் வழக்கத்திற்கு மாறான அவருடைய பவுலிங்கை பார்த்து கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்