ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்: இளம் வீரர் தலைமையில் களம் இறங்கும் இந்தியா..? - வெளியான தகவல்

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

Update: 2024-06-24 11:00 GMT

Image Courtesy: AFP

மும்பை,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இதுவரை குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 4 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்த தொடர் வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 6-ந் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கடந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா இந்த தொடரில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரையும் ஜிம்பாப்வே தொடருக்கு தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்