சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்க இந்திய அணியின் கேப்டன் முடிவு

ஒருநாள் உலகக் கோப்பையில் கவனம் செலுத்தியதால் கடந்த ஒரு வருடமாக டி20 போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடாமல் இருந்து வந்தார்.

Update: 2023-11-22 22:09 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஓராண்டாக எந்த சர்வதேச 20 ஓவர் போட்டியிலும் விளையாடவில்லை. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்தினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியே அவர் ஆடிய கடைசி 20 ஓவர் போட்டியாகும். அதன் பிறகு பெரும்பாலும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.

இந்த நிலையில் 36 வயதான ரோகித் சர்மா இனி சர்வதேச 20 ஓவர் போட்டியில் இருந்து முழுமையாக ஒதுங்கி இருப்பது என்று முடிவு செய்துள்ளார். தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருடன் கலந்து ஆலோசித்த பிறகு அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ரோகித் சர்மா 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 148 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 3,853 ரன்கள் சேர்த்துள்ளார்.

ரோகித் சர்மாவுக்குப் பிறகு, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய நான்கு தொடக்க ஆட்டக்காரர்களை இந்தியா கொண்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய லீக் போட்டிகளில் தனது திறமைகளை நிரூபித்துள்ளனர். இளம் வீரர்கள் தொடர்ந்து சொதப்பினால், தேர்வாளர்கள் அல்லது பிசிசிஐ ரோகித்தின் தற்போதைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மூன்று வடிவங்கள் மற்றும் ஐ.பி.எல். விளையாடுவது சாத்தியமற்றது. மேலும் டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை ஏழு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட வேண்டிய அட்டவணையில் இருப்பதால், இந்திய கேப்டன் ரோகித்தின் கவனம் பெரும்பாலும் சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

2025 இல் இந்தியாவை மற்றொரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதற்கான சாத்திக்கூறுகள் ரோகித் சர்மாவுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்