வீரர்கள் மட்டுமல்ல.. டி20 உலகக்கோப்பையை வெல்ல அந்த 3 பேரும் முக்கிய காரணம் - கேப்டன் ரோகித் சர்மா

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

Update: 2024-08-22 08:56 GMT

மும்பை,

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி ஆகியோரைப் போலவே ரோகித் சர்மா மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு களத்தில் விளையாடிய வீரர்களை தாண்டி ஜெய்ஷா, ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் ஆகியோர் தூண்களாக இருந்ததாக ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். குறிப்பாக பிசிசிஐ செயலாளர், பயிற்சியாளர், மற்றும் தேர்வுக்குழு தலைவராக அந்த மூவரும் இந்திய அணியில் மாற்றங்களை செய்வதற்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் ரோகித் தெரிவித்துள்ளார். அதே போல தற்போது டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள தாம் விரைவில் இந்தியாவுக்காக இன்னும் நிறைய ஐ.சி.சி. கோப்பைகளை வெல்வேன் என்று ரோகித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"சாதனைகள், முடிவுகள் போன்றவற்றை கவலைப்படாத அணியாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய கனவாகும். எதைப் பற்றியும் அதிகமாக சிந்திக்காமல் களத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்ற சூழ்நிலை அணியில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதுவே எங்களுக்கு தேவைப்பட்டது. அதற்காக மிஸ்டர் ஜெய்ஷா, ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் ஆகிய 3 தூண்களிடமிருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது. அதுவே நான் செய்த விஷயங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

அதே சமயத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் வந்து இந்திய அணி சாதனை படைக்க உதவிய வீரர்களையும் மறந்து விடக்கூடாது. நான் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதற்கு காரணம் இருந்தது. ஒருமுறை நீங்கள் போட்டிகளையும் கோப்பைகளையும் வென்று ருசி பார்த்து விட்டால் அதன் பின் நிற்க விரும்ப மாட்டீர்கள். எனவே எங்களைத் தொடர்ந்து வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்