ஐ.பி.எல். கிரிக்கெட் - மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமனம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மகிலா ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-10-13 12:23 GMT

கோப்புப்படம்

மும்பை,

மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் மகிலா ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்படி மும்பை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்க் பவுச்சர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2017 முதல் 2022 -ம் ஆண்டு வரை மும்பை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் மகிலா ஜெயவர்தனே. அந்த காலக் கட்டத்தில் மும்பை அணிக்காக மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மகிலா ஜெயவர்தனேவை மும்பை அணி நிர்வாகம், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் உலகளாவிய தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வந்தது. பயிற்சியாளர்களை நிர்வகிப்பது, அவர்களுடனான ஒப்பந்தம், திட்டம் என்று பல்வேறு சிக்கல்களை ஜெயவர்தனே கவனித்து வந்தார்.

இதன் காரணமாக 2023 மற்றும் 2024 ஆகிய 2 ஐ.பி.எல். சீசன்களிலும் மும்பை அணியின் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் செயல்பட்டார். 2023 ஐபிஎல் தொடரில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினாலும், கடந்த சீசனில் கடைசி இடத்தில் மும்பை அணி இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் ஜெயவர்தனேவை மும்பை அணி நிர்வாகம் மீண்டும் பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த 4 சீசன்களாக மும்பை அணி நிர்வாகம் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வரும் சூழலில், ஜெயவர்தனேவின் வருகை அந்த அணிக்கு சாதகமாக அமையும் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்