ஐ.சி.சி-யின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்ற இந்தியர்கள்

சிறந்த வீரர், வீராங்கனை விருதை இந்தியர்கள் வென்றுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-07-09 10:22 GMT

Image Courtesy: AFP 

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் டி20 உலகக்கோப்பை தொடரில் அசத்திய இந்திய நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர்  இடம்பெற்றிருந்தனர்.

அதேபோல் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் விஷ்மி குனரத்னே, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்தின் மாயா பவுச்சியர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை வென்றவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இன்று அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனை விருதை இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனாவும் வென்றுள்ளனர்.

ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை இந்தியர்கள் வென்றுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 




Tags:    

மேலும் செய்திகள்