நான் கேப்டனாக இருந்திருந்தால் 2019 உலகக்கோப்பையில் தோனியை அந்த இடத்தில் களமிறக்கி இருப்பேன் - ரோகித்

2019-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது.

Update: 2024-08-25 13:18 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த தோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார்.

மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

ஆனால் அவருடைய சர்வதேச கெரியர் அந்த அளவுக்கு சிறப்பானதாக முடிவடையவில்லை. ஏனெனில் 2019-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது. அந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். எனவே அவரின் கெரியர் வெற்றியுடன் நிறைவடையாதது கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் தாம் கேப்டனாக இருந்திருந்தால் தோனியை 4-வது இடத்தில் களமிறக்கி இருப்பேன் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "தனிப்பட்ட முறையில் 4வது இடத்தில் தோனி பேட்டிங் செய்வதுதான் அணிக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன். இருப்பினும் அது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் தோனி அப்போட்டியில் 4வது இடத்தில் பேட்டிங் செய்திருந்தால் நான் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்