நான் விளையாடியதிலேயே சிறந்த கேப்டன் அவர்தான் - ஆகாஷ் தீப் புகழாரம்

இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் குறித்து இளம் வீரரான ஆகாஷ் தீப் பகிர்ந்துள்ளார்.

Update: 2024-09-23 13:49 GMT

image courtesy: PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் தேர்வாகியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த அறிமுக போட்டியிலேயே நன்றாக பந்து வீசிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர் பி அணிக்கு எதிரான முதல் ரவுண்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் அடுத்ததாக வங்காளதேச தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வாய்ப்பில் வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார். குறைந்த ஓவர்களை வீசினாலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். புதிய பந்தில் அற்புதமாக ஸ்விங் செய்யும் பவுலராக உயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணிக்காக 2 போட்டிகளில் விளையாடிய அனுபவம் குறித்து ஆகாஷ் தீப் பகிர்ந்துள்ளார்.

அதில், "ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் நான் விளையாடியதிலேயே ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன். ஏனென்றால் ஒரு சகோதரரை போல் இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவார். இந்திய அணிக்காக ஆடிய 2 போட்டிகளிலும் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது.

ஒரு வேகப்பந்து வீச்சாளராக அனைத்து சூழல்களுக்கும், பிட்ச்களுக்கும் ஏற்ப செயல்பட வேண்டும். அப்போதுதான் விரைவாக கற்றுக் கொள்ள முடியும். அதேபோல் எனது பவுலிங்கில் புதிதாக எந்த சோதனைகளை செய்ய வேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். பேட்ஸ்மேன்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதனால் என் மீது நானே அதிக அழுத்தத்தை கொடுக்க விரும்பவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்