டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி கேட்ச் சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்த ஷான் பொல்லாக்

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதற்கு மிக முக்கிய காரணமாக சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் அமைந்தது.

Update: 2024-07-02 05:57 GMT

மும்பை,

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது உலகக் கோப்பையை டோனி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. அதன்பின் நடைபெற்ற தொடர்களில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பையை தற்போது இந்தியா வென்றுள்ளது. நீண்டகால உலகக் கோப்பை ஏக்கத்தை தணித்த இந்திய அணியினர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்கள்.

அதன்படி நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது. இதில் இந்தியா நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு 24 பந்தில் 26 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.

ஆனால் ஹென்ரிச் கிளாசெனின் (5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 52 ரன்) விக்கெட்டை பாண்ட்யா கழற்றியது, 18-வது ஓவரில் பும்ரா ஒரு விக்கெட் எடுத்து 2 ரன் மட்டுமே வழங்கி மிரட்டியது, இறுதி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (21 ரன்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே மிக லாகவமாக சூர்யகுமார் பிடித்தது இப்படி திக்...திக்...திக் திருப்பங்களுடன் ஆட்டமும் இந்தியா பக்கம் சாய்ந்தது. 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்னில் அடங்கி கோப்பையை கோட்டை விட்டது. சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த கேட்ச் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் சூரியகுமார் பிடித்தது கேட்ச் அல்ல உலகக்கோப்பை என்று இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். ஆனால் சில ரசிகர்கள் அது கேட்ச் கிடையாது என்றும்,அது சிக்சர் என்றும் சமூக வலைதளங்களில் குறை கூறி வந்தனர். எல்லைக்கோடு கொஞ்சம் நகர்த்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பவுண்டரி லைனில் அச்சு மைதானத்தில் இருந்ததாகவும் கூறினர். இதில் சூர்யகுமார் யாதவ் கால் வைத்ததால் நியாயமாக இது சிக்சர் என்று அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் விமர்சித்தனர்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஷான் பொல்லாக் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் சரியானது. அதில் எந்த தவறும் கிடையாது. ஆட்டத்தில் போக்கையே அந்த கேட்ச் மாற்றிவிட்டது. பவுண்டரி லைன் நகர்ந்து இருந்ததாக கூறுவது சரி கிடையாது. அது தெளிவான கேட்ச்தான். இதில் எந்த குறையும் கூற முடியாது" என்று தெளிவான விளக்கம் அளித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்