தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Update: 2024-09-20 21:40 GMT

ஷார்ஜா,

ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் மற்றும் ரியாஸ் ஹசன் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரியாஸ் ஹசன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ரஹ்மட் ஷா, குர்பாசுடன் இணைந்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை குவித்தனர். அபாரமாக விளையாடிய குர்பாஸ் 105 ரன்களிலும் ரஹ்மட் ஷா அரைசதம் அடித்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் அஸ்மத்துல்லா உமர்சாய் அதிரடியாக விளையாடி அணி 300 ரன்களை எட்ட உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடிய அஸ்மத்துல்லா உமர்சாய் 86 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனையடுத்து 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடியது.

தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விரைவில் விக்கெட்களை இழந்தனர்.பவுமா 38 ரன்னும், டோனி சோர்சி 31 ரன்னும், மார்கிரம் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.இறுதியில், தென் ஆப்பிரிக்கா 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 5 விக்கெட்டும், கரோடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22ம் தேதி நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்