உக்ரைன் ராணுவத்திற்கு பீரங்கிகள் வழங்கப்போவதாக அமெரிக்கா, ஜெர்மனி அறிவிப்பு

உக்ரைன் ராணுவத்திற்கு பீரங்கிகள் வழங்கப்போவதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் அறிவித்துள்ளன.

Update: 2023-01-26 09:42 GMT

வாஷிங்டன்,

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களை சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு பீரங்கிகள் வழங்கப்போவதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் அறிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பில், உக்ரைனுக்கு 31 எம்1 அப்ராம்ஸ் ரக பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

உக்ரைன் ராணுவம் தங்கள் எல்லையை தற்காத்துக் கொள்ளும் திறனை அதிகரிப்பதற்காகவும், அவர்களது இலக்குகளை அடைவதற்காகவும் இந்த பீரங்கிகள் உதவும் என்று பைடன் கூறியுள்ளார். மேலும் இது ரஷியாவிற்கான அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்த அவர், ரஷிய ராணுவம் தங்களுக்கு சொந்தமான இடத்திற்கு திரும்ப சென்றுவிட்டால் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனுக்கு ஒரு பட்டாலியன் பீரங்கிகளை வழங்க ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 14 லெப்பார்ட் 2 ஏ6 வகை பீரங்கிகள் உக்ரைன் ராணுவத்திடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்