யுரேனியம் துகள்கள் விவகாரம்: ஈரானுடன் சர்வதேச அணுசக்தி முகமை மீண்டும் பேச்சுவார்த்தை!

‘யுரேனியம் துகள்கள்’ விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக ஈரானிடம் சர்வதேச அணுசக்தி முகமை விளக்கம் கேட்டு வருகிறது.

Update: 2022-09-27 14:10 GMT

வியென்னா,

ஈரானுடன் அணுசக்தி விவகாரத்தில் நிலுவையில் உள்ள பாதுகாப்பு பிரச்சினைகளை தெளிவுபடுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்று ஐ.நா. தலைமை அணுசக்தி அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நீண்ட காலமாக 'யுரேனியம் துகள்கள்' விவகாரம் தொடர்பாக ஈரானிடம் ஐ.நா. தலைமை அணுசக்தி அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை விளக்கம் கேட்டு வருகிறது.

ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் உலக நாடுகளுக்கு இடையே 2015ம் ஆண்டு அணுஆயுத ஒப்பந்தத்தை புதுப்பிக்க நீண்ட விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், வியென்னாவில் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ரபேல் க்ரோஸி, ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமியை சந்தித்துப் பேசினார்.

மனிதனால் உருவாக்கப்பட்ட யுரேனியம் துகள்கள், ஈரானில் சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நடைபெறும் விசாரணை பற்றி இருதரப்புக்கும் இடையே விவாதம் மற்றும் நீண்ட ஆலோசனை நேற்று நடந்தது.

இந்த பிரச்சினையில் சர்வதேச அணுசக்தி முகமையுடன் ஈரான் ஈடுபாடு இல்லாமல் செயல்படுவதை சர்வதேச அணுசக்தி முகமை விமர்சித்தது. ஏனெனில் 'யுரேனியம் துகள்கள்' விவகாரம் தொடர்பாக ஈரானிய தலைவர்கள் நம்பகமான விளக்கங்களை வழங்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதிக்காக மட்டுமே என்று அந்நாடு சொல்வதை உறுதியாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்