செல்ல நாய் தகனத்தில் விபரீதம்: கி.மீ. கணக்கில் பரவிய காட்டுத்தீ; ரூ.1.67 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

அமெரிக்காவில் செல்ல நாயை அரைகுறையாக தகனம் செய்து விட்டு சென்ற நபரால் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Update: 2024-09-28 12:00 GMT

நியூயார்க்,

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் மேற்கே கடந்த மாதம் காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவி பலத்த பாதிப்பை ஏற்படுத்தி சென்றது. 11 சதுர மைல்கள் (28 சதுர கி.மீ.) பரப்பளவுக்கு தீ பரவியதில் மரங்கள் எரிந்து போய் விட்டன. வனவாழ் விலங்குகளும், பறவைகளும் உயிரிழந்தன.

இந்த காட்டுத்தீயால் ரூ.1.67 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. இந்த காட்டுத்தீ தற்போது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், நபர் ஒருவரை கைது செய்தனர். உத்தா மாகாண எல்லையையொட்டிய நுக்லா நகருக்கு உட்பட்ட பகுதியில் அவர் வசித்து வருகிறார்.

செல்ல பிராணியாக ராக்கெட் என்ற பெயரிடப்பட்ட நாய் ஒன்றை அவர் வளர்த்து வந்திருக்கிறார். இந்த நாய் மற்றொரு நாயுடன் சண்டை போட்டுள்ளது. இதில், அந்த நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் ராக்கெட்டை கருணை கொலை செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இறந்த நாயை தகனம் செய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. அவர் எரிபொருள் நிரப்பிய கேன் ஒன்றை நெருப்பை நோக்கி தூக்கி எறிந்ததில், அது வெடித்து மரத்தின் மீது பட்டு தீப்பற்றி கொண்டது. உடனடியாக தீ காடு முழுவதும் பரவியது.

இந்த காட்டுத்தீ பரவல் பற்றி அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றபோது, அந்நபர் வாகனம் ஒன்றில் அந்த வழியே தப்பி சென்றிருக்கிறார். அதனை கவனித்ததும், சம்பவ பகுதிக்கு போலீசார் சென்று ஆய்வு செய்தனர். இதில், அரைகுறையாக எரிந்த நாயின் சடலம் அருகே அந்நபர், ராக்கெட் நாயே. அன்புக்குரிய உன் ஆன்மா சாந்தியடையட்டும் என எழுதி வைத்து விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தீவிர தேடுதலுக்கு பின்னர் அந்நபரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்