பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க அஜித் தோவல் இலங்கை பயணம்

இலங்கை சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசுகிறார்.

Update: 2024-08-29 12:29 GMT

கொழும்பு,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரண்டு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று காலை கொழும்பு சென்றடைந்தார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்புவில் அதிபர் ரணில் விக்ரம சிங்கே மற்றும் அரசியல் தலைவர்களைஅஜித்தோவல் சந்திக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இலங்கையுடன் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்து உரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித் தோவலின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கொழும்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இந்திய உயர் அதிகாரிகள் அழைப்பு விடுத்திருப்பதாக அக்கட்சிகளின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு, தற்போது விரிவிடைந்துள்ளது. இதில், மொரிஷியஸ் மற்றும் வங்கதேசம் ஆகியவை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன. சீஷெல்ஸ் பார்வையாளராக இணைந்துள்ளது. இந்த அமைப்பின் பாதுகாப்பு சார்ந்த மாநாடு கொழும்புவில் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பான விவாதங்களை அஜித் தோவல் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், மாநாட்டை முடித்துக் கொண்டு நாளை மாலை கொழும்புவில் இருந்து அஜித் தோவல் இந்தியா புறப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்