ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்ற முன்னாள் காதலனும் உயிரிழப்பு

ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்ற முன்னாள் காதலனும் உயிரிழந்தார்.

Update: 2024-09-10 21:16 GMT

கம்பாலா,

உகாண்டாவை சேர்ந்த தடகள வீராங்கனை ரபாகா சப்தகி. இவர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தொடர் ஓட்டம் பிரிவில் பங்கேற்ற ரபாகா 44வது இடத்தை பிடித்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற ரபாகா கடந்த மாத இறுதியில் சொந்த ஊர் திரும்பினார்.

இதனிடையே, ரபாகாவுக்கும் அவரது காதலனான டிக்சன் டைமா மென்கிச் என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்துவேறுபாடு நிலவி வந்தது. மேலும், நிலம் தொடர்பான பிரச்சினையும் நிலவி வந்தது.

அந்த வகையில் கடந்த 1ம் தேதி மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ரபாகாவை காதலன் டிக்சன் இடைமறித்து வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த டிக்சன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ரபாகா மீது ஊற்றி தீ வைத்தார். இதில், ரபாகா உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் டிக்சனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ரபாகா சப்தகி கடந்த 4ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், தீக்காயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரபாகா சப்தகியின் காதலன் டிக்டன் டைமாவும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 30 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த டிக்டன் நேற்று உயிரிழந்தார்.

காதலன் தீ வைத்ததில் ஒலிம்பிக் வீராங்கனை ரபாகா உயிரிழந்த நிலையில் அவரது காதலனும் தீக்காயங்களால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்