குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க ஆஸ்திரேலியா முடிவு

இளம் வயதினரை மைதானங்களில் விளையாடுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் நடப்பு ஆண்டிலேயே இந்த தடை கொண்டு வரப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறினார்.

Update: 2024-09-10 10:32 GMT

கான்பெர்ரா,

குழந்தைகள் தற்போது செல்போன் மற்றும் சமூக வலைதளங்களான இன்ஸ்டா, பேஸ்புக் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியதாவது:-

குழந்தைகளை அவர்களின் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலக்கி விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால் சில சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது.

சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்கள், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பது கவலை அளிக்கிறது.

எனவே குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எந்த வயது குழந்தைகளுக்கு தடை விதிப்பது என்பது குறித்து வயது சரிபார்ப்பு சோதனை விரைவில் தொடங்கப்படும். குறைந்தபட்ச வயது  16 ஆக நிர்ணயிப்பதே தனது விருப்பம். இது உலகளாவிய பிரச்சினை. இதில் தீர்வு காண உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, 61 சதவீதம் ஆஸ்திரேலிய மக்கள் 17 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்