இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் கைது

இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-28 17:11 GMT

கொழும்பு,

இலங்கையில் சமூக வலைதளங்களில் போலியான வாக்குறுதிகளை கொடுத்து, பொதுமக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று பின்னர் மோசடி செய்யும் கும்பல் குறித்து காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இலங்கையின் நெகொம்போ பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 13 பேரை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 57 மொபைல் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி கும்பலுக்கு துபாய், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் நிதி மோசடி, சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கொழும்பு அருகே உள்ள மடிவேலா மற்றும் பட்டர்முல்லா பகுதிகளில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த பல நபர்களை கைது செய்துள்ளனர். இதில் சுமார் 60 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து 135 மொபைல் போன்கள் மற்றும் 57 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்