நவீனத்தை விரும்பும் இளைய தலைமுறையினர் பாரம்பரியத்தையும் ஏற்க வேண்டும் - மத்திய மந்திரி பூபேந்திர யாதவ்

“நவீனத்தை விரும்பும் இளைய தலைமுறையினர் பாரம்பரியத்தையும் ஏற்க வேண்டும்” என விஸ்வகர்மா திட்ட தொடக்க விழாவில் மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் பேசினார்.

Update: 2023-09-17 19:34 GMT

விஸ்வகர்மா திட்டம்

பாரம்பரிய கைவினை கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

சென்னை அடையாறில் நடந்த நிகழ்ச்சியில் விஸ்வகர்மா திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் ஜல்சக்தி திட்ட இயக்குனர் ஆர்.தங்கமணி, வருமான வரித்துறை இணை கமிஷனர் வி.நந்தகுமார், மெப்ஸ் திட்ட வளர்ச்சி கமிஷனர் அலெக்ஸ் பால்மேனன், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை இணை இயக்குனர் எம்.ஜவஹர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் பேசியதாவது:-

வளர்ச்சி பாதையில் இந்தியா

பிரதமர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஏழைகளின் நலனுக்காகவே அர்ப்பணித்து வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து வருகிறார். அவரது தலைமையின் கீழ் உள்நாட்டு வளர்ச்சியை எட்டிய நிலையில், உலகளவிலும் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த அர்ப்பணிப்பும், உழைப்புதான் ஜி-20 மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி, இன்று இந்தியா உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது.

நரேந்திர மோடியின் பிறந்தநாளில் இந்த விஸ்வகர்மா திட்டத்தை தொடங்குவது சிறப்புக்குரியது. இதன் மூலம் கலை மற்றும் கைவினை கலைஞர்கள் பெரும் பயனடைவார்கள்.

கைவினை கலைஞர்களின் திறன்

பெரும் சிறப்புகளை கொண்ட தமிழ் பண்பாட்டை பேணி காப்பதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் கொண்டுள்ளார். தமிழக பெருமை சொல்லும் செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற செய்துள்ளார். தமிழகம் கலை, கலாசாரம், கல்வி, தொழில் துறையில் ஆற்றல்மிக்க பூமியாக விளங்குகிறது. அத்தகைய பூமியில் கலை மற்றும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முயற்சியாக விஸ்வகர்மா திட்டம் வந்துள்ளது.

இதன் மூலம் அந்த கலைஞர்களின் திறன்கள் இன்னும் உலகளாவிய தளத்துக்கு செல்லும், மேம்படும். பாரம்பரிய கலை மற்றும் கைவினை கலைஞர்களின் மேம்பாடு, தமிழக கலை-கலாசாரத்தில் நிச்சயம் எதிரொலிக்கும். இத்தகைய கலைஞர்கள் கண்ணியமுடன் வாழத்தான் இத்தனை ஆண்டுகாலம் இல்லாத வகையில் இத்தகைய சிறப்பான திட்டத்தை பா.ஜ.க. அரசு முன்னெடுத்திருக்கிறது. நவீனத்தை விரும்பும் இளைய தலைமுறையினர் நமது பாரம்பரியத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே கலைஞர்களின் வாழ்க்கை தரத்துக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

வாழ்வாதாரம் மேம்படும்

நேர்மறை எண்ணம், விடாமுயற்சி, முன்னேற்றம் இது கலைஞர்களின் வாழ்க்கையில் சாத்தியமாக வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னை கலாசாரங்களின் வடிவமாகவே திகழ்ந்து வருகிறது. இந்த விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் தச்சர், கொல்லர், சிற்பி உள்ளிட்ட கலைஞர்கள் வாழ்வாதாரம் காண்பார்கள். எனவே இந்த திட்டத்தில் கலைஞர்கள் அதிகளவில் சேர்ந்து பயன் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் டெல்லியில் இருந்து விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசும் காட்சி காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்