குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

நீடாமங்கலம் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-07-22 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

முக்கிய சாலை

நீடாமங்கலம் அருகே உள்ள கண்ணம்பாடி கூலையாறு மதகில் இருந்து கோரையாறு தென்கரை மேலாளவந்தச்சேரி ஊராட்சி காரிச்சாங்குடி வரை செல்லும் முக்கிய சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக காரிச்சாங்குடி மேலத்தெரு, கீழத்தெரு, மடப்புரம், சமுதாயக்கரை, மேலாளவந்தசேரி, கீழாளவந்தசேரி என பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்கள் தினந்தோறும் சென்று வருகின்றனர்.

குண்டும், குழியுமாக காணப்படுகிறது

இந்த சாலை வழியாக வந்து நீடாமங்கலம், அம்மாப்பேட்டை, தஞ்சாவூர், பூண்டி, திருவாரூர், கும்பகோணம், மன்னார்குடி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள், தொழில் கல்வி நிறுவனங்களுக்கும் மோட்டார் சைக்கிள், சைக்கிள்களில் சென்று வருகின்றனர்.

இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

மேலும் ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சாலை சேதமடைந்துள்ளதால் கிராம இளைஞர்களுக்கு திருமணத்துக்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர்.

இந்த சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்