சிலை திறப்பு விழா: விஜயகாந்தின் மகன் மயக்கம் - தொண்டர்கள் அதிர்ச்சி

விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முகபாண்டியன் மயக்கம் அடைந்ததால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2024-08-25 07:50 GMT

சென்னை,

தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, பேனா மற்றும் மக்களுக்கு இனிப்புகளை அக்கட்சியின் நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த 'கேப்டன்' விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் விஜயகாந்தின் முழு உருவ வெண்கல சிலையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிக தலைமை அலுவலகம் இனி "கேப்டன் ஆலயம்" என்று அழைக்கப்படும். புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும்" என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியனும் தொண்டர்களைச் சந்தித்து வந்தனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசல் காரணமாக விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகபாண்டியன் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டர்கள் அதிக அளவில் இருந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட காரணத்தால் அவர் மயக்கம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மயக்கம் அடைந்த அவரை உடனே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்