தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை பா.ம.க.வுக்கு சாதகமாக உள்ளது

Update: 2023-03-01 19:30 GMT

தமிழ்நாட்டில் ஏற்பட்டு உள்ள அரசியல் சூழ்நிலை பாட்டாளி மக்கள் கட்சிக்கு சாதகமாக உள்ளது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மனம் விட்டு பேசுங்கள்

சேலம் மாநகர் மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் 'மனம் விட்டு பேசுங்கள்' என்ற நிகழ்ச்சி இரும்பாலையில் உள்ள ஆர்.கே.வி. திருமண மகாலில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் விஜயராசா வரவேற்று பேசினார்.

வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், மாவட்ட தலைவர் கதிர்ராஜரத்தினம், மாநில பசுமை தாயக இணை செயலாளர் சத்ரியசேகர், தேர்தல் பணி குழு தலைவர் எம்.பி.சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், அடுத்து முறை ஆட்சிக்கு வருவது இல்லை. அ.தி.மு.க.வில் தற்போது பிளவு ஏற்பட்டு பல அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லாத நிலையில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலை பா.ம.க.வுக்கு சாதகமாக உள்ளது.

தேர்தல் பணியாற்ற வேண்டும்

எனவே தொண்டர்கள், கவனத்துடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலுக்குள் பா.ம.க.வின் கொள்கைகளை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைக்க தொண்டர்கள் ஒவ்வொருவரும் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகிகளுடன் புகைப்படம்

தொடர்ந்து மேடையில் நின்றபடி கட்சி மூத்த நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து குறைகள் கேட்டு அறிந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதில் மாணவர் அணி டாக்டர் ராஜேஸ், பகுதி துணை செயலாளர் கவுரிசங்கர், பொறுப்பாளர்கள் அருள், பூமாலை, சுப்பிரமணி, ஜெயபால், உழவர் பேரியக்க செயலாளர் முருகன், மாவட்ட அன்புமணி தம்பிகள் படை செயலாளர் வேல்முருகன், மாவட்ட துணை தலைவர் முருகேசன், ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுவேல், மாவட்ட துணை செயலாளர் ரத்தினவேல், மாவட்ட அமைப்பு செயலாளர்கள் அன்புக்கரசு, ராஜமாணிக்கம், சரவணன், ஒன்றிய செயலாளர் பாப்பாகணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், இளைஞர் அணி செயலாளர்கள் டி.விஜயகுமார், சுப்பிரமணி, மாநகர் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பொன்.ரமேஷ், ஒன்றிய தலைவர் அருள்மணி, ஒன்றிய துணை செயலாளர்கள் நிர்மல், பிரகாஷ், அருண்குமார், வீரபாண்டி ஒன்றிய கவுன்சிலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்