கத்தியால் குத்தி டெய்லர் படுகொலை

பழனியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த டெய்லரை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-21 17:24 GMT

மேற்கு வங்க மாநில டெய்லர்

மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியை சேர்ந்தவர் கோபால்சமந்தா. அவருடைய மகன் ஜெயந்த் சமந்தா (வயது 34). டெய்லர். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். இவர்கள், மிட்னாபூரில் வசித்து வருகின்றனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்த் சமந்தா மட்டும், திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வந்தார். பழனி அடிவாரம் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்து, அங்கு தையல் (எம்பிராய்டிங்) வேலை செய்து வந்தார்.

இதேபோல் அவரது சொந்த ஊரை சேர்ந்த 5 பேரும், பக்கத்து அறையில் தங்கி உள்ளனர். வேலையை முடித்து விட்டு ஜெயந்த் சமந்தா தனது அறையில் இருந்தார்.

கத்தியால் குத்திக்கொலை

இந்தநிலையில் முகமூடி அணிந்தபடி 4 பேர் கொண்ட கும்பல், ஜெயந்த் சமந்தாவின் வீட்டுக்குள் புகுந்தது. பின்னர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினர்.

சிறிதுநேரத்தில், ஜெயந்த் சமந்தா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, அங்கிருந்து 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது, அறைக்குள் ஜெயந்த் சமந்தா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் என்ன?

இந்த கொலை சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பம்பிடித்தபடி சிறிது தூரம் ஓடிய நாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதேபோல் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த டெய்லர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்