தமிழக அரசு உயர்த்திய கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் - ஜி.கே.வாசன்

தமிழக அரசு, உயர்த்திய கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

Update: 2024-08-06 08:02 GMT

சென்னை,

ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழக அரசு, வீடு கட்ட விரும்பும் பொது மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. அரசு, சென்னை உட்பட்ட மாநிலம் முழுவதும் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதியை 100 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தி ஆணை வெளியிட்டிருப்பது நியாயமில்லை.

காரணம் ஏற்கனவே பத்திரப்பதிவு கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, தண்ணீர் வரி உயர்வு மூலம் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றிய அரசு, இப்போது கூடுதலாக கட்டிடம் கட்டுவதிலும் கட்டணத்தை உயர்த்தி பொது மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

கடந்த மாதம் தமிழக அரசு உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 2,500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில் மற்றும் 3,500 சதுர அடி வரையிலான பரப்பளவிலான நிலத்தில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அதற்கான கட்டணங்கள் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன. தொடர்ந்து சென்னையில் 8,900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ. 9.54 லட்சமாக அதிகரித்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும். கட்டிட வரைபட கட்டண உயர்வால் சொந்தமாக வீடு கட்ட நினைப்பவர்கள், வீடு கட்டி விற்க நினைப்பவர்கள் உள்ளிட்ட கட்டிடம் கட்டும் தொழிலானது பெருமளவு பாதிக்கும். வீடு இல்லாமல் புதிதாக வீடு கட்டலாம் எனக்காத்திருந்த சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குத்தான் இந்த கட்டண உயர்வு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஏழை எளிய மக்களை வீடு கட்ட முடியுமா என யோசிக்க வைத்துள்ளது இந்த கட்டண உயர்வு. எனவே தமிழக அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ள கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்