2026-ல் தனித்து போட்டி: என் பாதை, என் பயணம் தனி - சீமான் பேட்டி

இவருடன் செல்கிறேன், அவருடன் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இருக்க முடியாது என்று சீமான் கூறினார்.

Update: 2024-09-16 11:56 GMT

காரைக்குடி,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விகளுக்கு நேரடி பதில் அளிப்பதை சீமான் தவிர்த்து வந்த நிலையில், தற்போது 2026-ல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீமான் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது. நான் தனித்து போட்டியிடுகிறேன். என்னுடன் சேர வேண்டுமா என்பதை மற்றவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நானாக இவருடன் செல்கிறேன், அவருடன் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இருக்க முடியாது.

நான் பிரபாகரன் மகன், என் பாதை தனி, என் பயணமும் தனி. என் இலக்கு தனி. எனக்கு ஒரு கனவு இருக்கிறது. என் நாட்டை எப்படி படைக்க வேண்டும் என்று என் முன்னோர்கள் தூக்கி சுமந்த கனவு அது. பூமியின் சொர்க்கமாக என் நாட்டை படைக்க நான் ஆசைப்படுகிறேன். அதற்கு இவரோடு சேரலாம், அவரோடு சேரலாம் என்றில்லை.

"என்னுடன் சேர்ந்தால் நாடும் மக்களும் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் வாருங்கள். இல்லையெனில் விடுங்கள். ஒரு தலைவனுக்கு முதல் தகுதி, தன் மண்ணையும், மக்களையும் முழுமையாக நேசிக்க வேண்டும். நான் என் மக்களை முழுமையாக நம்புகிறேன், நேசிக்கிறேன். அதனால் நான் தனித்து போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்