கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது

ஊத்துமலை அருகே கார் டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-16 20:15 GMT

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே ருக்மணியம்மாள்புரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் முருகராஜ். இவரது மகன் பாக்கியராஜ் (வயது 35). காற்றாலை நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே ஊரில் மேற்கு தெருவில் வசிக்கும் சிவா மகன் வசந்த் (25) என்பவருக்கும் இடையே கோவில் விழாவுக்கு கொடிகட்டுவது குறித்து ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை வசந்தை, பாக்கியராஜ் அடிப்பதற்காக தென்னை மட்டையை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வசந்த் மற்றும் அவரது உறவினர் கருத்தபாண்டியன் மகன் கலைச்செல்வன் (42) ஆகியோர் சேர்ந்து பாக்கியராஜை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த பாக்கியராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று படுகாயம் அடைந்த பாக்யராஜை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்