அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட சுற்றறிக்கை விட்டதாக வதந்தி

அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2024-09-04 13:48 GMT

கோப்புப்படம்

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என்று கூறி பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அதன் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வதந்தி

'விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்.,7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் எனக்கூறி பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்' என்ற செய்திப் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

இது பொய்யான செய்தி. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், 'விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான முறையில் கொண்டாடும் பொருட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 உறுதிமொழிகளை எடுக்க வேண்டும்' என்றே பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியிருக்கின்றனர். இதைத் திரித்து அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியதாகப் பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்