205 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.4.10கோடி நிதியுதவி..!

அசாதாரண சூழ்நிலைகளில் உயிரிழந்த 205 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4.10 கோடி வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Update: 2023-09-05 11:45 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு தரப்பில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மீனவர் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசானது, மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக இறக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசால் தேசிய மீன்வள கூட்டுறவு இணையத்தின் வழியாக மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மீனவர்களுக்கான குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படாத காலமான 01.06.2020 முதல் 18.10.2021 வரை இறந்த 205 மீனவர்களின் குடும்பங்களின் துயரினை போக்கிடும் வகையில் 18.08.2023 அன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் அக்குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இறந்த 205 மீனவர்/மீனவ மகளிர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4.10 கோடிக்கு (ரூபாய் நான்கு கோடியே பத்து லட்சம் மட்டும்) நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி 30.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்