ஆர்.எஸ்.பாரதி ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்தி பேசியிருக்கிறார் - அண்ணாமலை கண்டனம்

ஆர்.எஸ்.பாரதி ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்தி பேசியிருக்கிறார் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-03 13:58 GMT

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

எப்போதெல்லாம், தி.மு.க ஆட்சிக்கு, பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலய வாசலிலேயே இருக்கும் ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல. கள்ளக்குறிச்சியில், தி.மு.க ஆதரவோடு நடந்த கள்ளச்சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற, ஆர்.எஸ்.பாரதியைக் களமிறக்கியிருக்கிறார்கள்.

முன்பு ஒருமுறை, தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்றப் பதவிகள் கிடைத்தது தி.மு.க போட்ட பிச்சை என்று பேசினார். இன்று, தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது தி.மு.க போட்ட பிச்சை என்று பேசியுள்ளார். அதோடு, தமிழகத்தில் இன்று நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது என்று, ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

தமிழகத்தில், 1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க, இதுவரை வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே அமைத்துள்ளது என்பதை மறந்த ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் மருத்துவர்களை உருவாக்கியதே தி.மு.க.தான் என்று போலிப் பெருமை பேசிக் கொள்கிறார். தி.மு.க முதல் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளுக்கு வாதாட வேண்டுமானால், டெல்லி, மும்பையிலிருந்து பல மூத்த வழக்கறிஞர்களையும், தமிழக அரசு சார்பான வழக்குகளுக்கு, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுக்கும் கோபாலபுர குடும்பம், ஆர்.எஸ்.பாரதியை வாதாட அனுப்புவது, கதைக்கு உதவாத வழக்குகளுக்காகத்தான்.

தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும், தங்கள் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவச் செல்வங்களை அவமானப்படுத்தி, அவர்கள் வளர்ச்சிக்கு தி.மு.க.தான் காரணம் என்று கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களைத்தான், தி.மு.க உண்மையில் உருவாக்கியிருக்கிறது.

தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் தி.மு.க-வின் ஆணவப் போக்கும், ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் அனைவரும் தி.மு.க-வினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்