மணிமுத்தாறு தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர கோரிக்கை

மணிமுத்தாறு தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-12-21 18:45 GMT

தொண்டி, 

மணிமுத்தாறு தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தொடர் மழை

திருவாடானை தாலுகா தோட்டா மங்கலம் கிராமத்திற்கு திருவாடானையில் இருந்து செல்லும் சாலையில் ஆதியூர் கண்மாய் கால்வாய் மற்றும் மணிமுத்தாறு கால்வாய் குறுக்கே செல்கிறது. இதில் உள்ள தரைப்பாலம் கட்டப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால் தரைப்பாலம் முற்றிலுமாக சேதம் அடைந்து உள்ளது.

மேலும் தொடர் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்லும்போது தரைப் பாலத்தை மூழ்கடித்து செல்லும் நிலை ஏற்படுகிறது. தரைப்பாலத்தின் வழியாக 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் திருவாடானைக்கு வந்து தங்களுடைய அன்றாட பணிகளுக்காக வெளியூர் செல்லும் நிலை இருந்து வருகிறது.

தரைப்பாலத்தின்மேல் தண்ணீர் செல்லும்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். பல கிலோமீட்டர் தூரம் சுற்றிப்பாதையில் செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.

ஆய்வு

இந்த தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக தரவேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வலியுறுத்தி வருகின்றனர். பாலத்தில் அதிக அளவு தண்ணீர் செல்லும் காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதுநாள்வரை மேம்பாலம் கட்டப்படாமல் இருந்து வருகிறது. எனவே தமிழக அரசும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தருவதுடன் குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ள தோட்டமங்கலம் சாலையை புதிய தார்ச்சாலையாக அமைத்துதர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் முத்துராமு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்