பரமத்திவேலூர் அருகே மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பரமத்திவேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-03 15:48 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மழைநீர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையின் குறுக்கே மழைநீர் வெளியேறும் வகையில் குழாய் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாலையின் குறுக்கே இருந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் பாரதிநகர் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மழைநீரை அகற்றகோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த பாரதி நகர் பொதுமக்கள் நேற்று பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், ஓலப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கனகுமயில்சாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து குழாயில் ஏற்பட்ட அடைப்பு அகற்றப்பட்டு அப்பகுதியில் தேங்கி நின்ற மழைநீர் வெறியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக பரமத்திவேலூர்- மோகனூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்