சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி

சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

Update: 2024-07-29 13:19 GMT

கோப்புப்படம்

சென்னை,

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

இந்த சூழலில் உதகை அருகே புதுமந்து காவல்நிலைய ஆய்வாளர் அல்லி ராணி என்பவர் அளித்த புகாரில் சவுக்கு சங்கர் மீது, உதகை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழ் இனியன் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். அதில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தததை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. சவுக்குசங்கர் தரப்பில் வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். சவுக்கு சங்கரை விசாரிக்க வேண்டியிருப்பதால் 5 நாட்கள் போலீஸ் காவல் வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்