தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை

கும்பகோணம் அருகே தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-06-05 21:59 GMT

திருவிடைமருதூர்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 50). இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் ஆகும். இவரது மனைவி ராணி(40). இவரும், திண்டுக்கல் மாவட்டம் பாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்.

அன்பழகன் கடந்த பல ஆண்டுகளாக தனது குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் தங்கியிருந்து வட்டிக்கு பணம் கொடுக்கும்(பைனான்ஸ்) தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.

தாய்-மகள் தற்கொலை

இவர்களது வீட்டில் ராணியின் தாய் மீனாட்சியும் (65) கடந்த சில மாதங்களாக தங்கி இருந்துள்ளார். ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அன்பழகன், நாளடைவில் தனது மனைவியிடம் உனது தாயை ஊருக்கு அனுப்பி வைக்காமல் இங்கேயே தங்க வைத்துள்ளாயே? என்று கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், தாய் மீனாட்சி மற்றும் அவரது மகள் ராணி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் அருகருகே நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த தகவலின்பேரில், திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாய்-மகள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ராணி தனது தாயுடன் இந்த துயர முடிவை தேடிக்கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகள் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





Tags:    

மேலும் செய்திகள்