தர்மபுரியில் பரபரப்புநகை மதிப்பீட்டாளர் மீது தாக்குதல்2 பேரிடம் விசாரணை

Update: 2023-07-31 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் கடைக்குள் புகுந்து நகை மதிப்பீட்டாளர் மீது தாக்குதல் நடத்தி தகராறு செய்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தர மதிப்பீடு

தர்மபுரி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 44) நகை மதிப்பீட்டாளரான இவர் தர்மபுரியில் கணினி மூலம் நகை மதிப்பீடு செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த கவுதம் என்பவர் தங்க நகையை கொண்டு வந்து தரத்தை பரிசோதித்து தருமாறு கூறினார்.

பிரதீப் அந்த நகைகளை வாங்கி பரிசோதித்துப் பார்த்தார். அப்போது அவை 22 கேரட் தங்கம் என்பது தெரியவந்தது. நகையின் தரத்தின் உண்மை நிலையை அவர் கூறினார். தொடர்ந்து அந்த நகைகளை விற்க வியாபாரிகளிடம் கவுதம் எடுத்துச் சென்றார். அப்போது கவுதமிடம் பேசிய 2 பேர் அந்த நகையை தங்களுக்கு தெரிந்தவர்களிடம் விற்று தருவதாகவும், இதற்காக தங்களுக்குத் தெரிந்த நபர்களிடம் நகையின் தரத்தை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

சரமாரி தாக்குதல்

அப்போது கவுதம் ஏற்கனவே பிரதீப் என்பவரிடம் நகையை மதிப்பீடு செய்து விட்டதாகவும் இந்த நகைகள் 22 கேரட் தங்க நகை என்று உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறினார். இதையடுத்து அந்த 2 நபர்களும் பிரதீப்பின் கடைக்கு சென்றனர்.

நகை விற்பனை செய்ய வருபவர்களிடம் ஏன் தங்கத்தின் உண்மையான தரத்தை கூறினாய் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதீப் சரமாரியாக தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

2 பேரிடம் விசாரணை

இதுதொடர்பாக அவர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தர்மபுரியைச் சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகை மதிப்பீட்டாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் தர்மபுரி டவுன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்