உதவி செய்வதுபோல் நெருக்கம்... 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-29 00:21 GMT

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் தர்மபுரி அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் பணிபுரிந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்த ஒரு சிறுமி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

தாயின் பராமரிப்பில் இருந்து வந்த சிறுமியின் குடும்ப சூழ்நிலையை பார்த்து ஆசிரியர் சரவணன் அந்த சிறுமிக்கு சில உதவிகளை செய்து வந்தார். அதன் பின்னர் சிறுமி தர்மபுரியில் உள்ள வேறு ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படிப்பை முடித்தார். தற்போது 17 வயதான சிறுமி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் ஆசிரியர் சரவணன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியிருந்தார்.

இதுதொடர்பாக தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு உதவிகள் செய்து நெருக்கமாக பழகிய சரவணன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்