வெவ்வேறு இடங்களில் சம்பவம்: மாடியில் இருந்து தவறி விழுந்த 2 பேர் சாவு

இருவேறு இடங்களில் நடந்த சம்பவத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update:2022-06-02 12:48 IST
வெவ்வேறு இடங்களில் சம்பவம்: மாடியில் இருந்து தவறி விழுந்த 2 பேர் சாவு

சென்னை ஜாம்பஜார், முனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 41). அச்சகத் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் 2-வது மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பாண்டியராஜனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், சூளைமேடு வீரபாண்டி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). கார் ஏ.சி. மெக்கானிக்கான இவர், தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் புழுக்கமாக இருந்ததால் வீட்டின் 4-வது மாடிக்கு படுப்பதற்காக சென்றார்.

அப்போது நிலைதடுமாறி 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ், பரிதாபமாக இறந்தார். நேற்று காலை சுரேஷ் பிணமாக கிடப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்