இன்று முதல் வீடுகள் தோறும் தேசிய கொடியேற்றுங்கள்

இன்று முதல் வீடுகள் தோறும் தேசிய கொடியேற்றி, அதனுடன் செல்பி எடுத்து இணையத்தில் பதிவேற்றி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

Update: 2022-08-12 17:05 GMT

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வீடுகள் தோறும் ஏற்றுங்கள்

நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக இன்று (சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றிட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றி தொடர்ந்து பறக்கவிடுங்கள். தேசியக் கொடியை ஏற்றும்போது உரிய மரியாதையுடனும், விதிகளுக்குட்பட்டும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்நிகழ்வு முடிந்தவுடன் தேசியக்கொடியை உரிய முறையில் இறக்கி பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

இணையதள முகவரி

பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஏற்றப்படும் தேசியக் கொடியின் புகைப்படத்தினை www.harghartiranga.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இல்லையெனில் தேசியக் கொடியுடன் செல்பி எடுத்து அதனை மேற்காணும் இணையதளத்தில் உள்ளீடு செய்து தங்களுக்கான சான்றிதழினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் மாவட்டத்தில் 683 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு கட்டிடங்கள், ரேஷன் கடை, அஞ்சல் நிலையங்கள், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் உரிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதியாகிய ஊராட்சி மன்றத் தலைவரால் மட்டுமே தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும். இதற்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேசியக் கொடிகள் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்