அவையில் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகளின் உணர்வுகளையும் புறக்கணித்துள்ளார் கவர்னர் - முத்தரசன்

ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் கவர்னர் ஈடுபட்டிருக்கிறார் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2024-02-12 08:49 GMT

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் ஆண்டு தோறும் சட்டமன்ற பேரவையில் உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைப்பது அரசியலமைப்பு சட்டப்படி கவர்னரின் கடமைப் பொறுப்பாகும்.

வரும் ஆண்டில் (2024-25) மக்கள் பிரச்சினைகள் மீதும், நிதி நிர்வாக முறையிலும் அரசின் கொள்கை நிலை என்ன? எந்த இலக்கை நோக்கி அரசு பயணிக்கும்? என்பது போன்ற அரசின் கொள்கை நிலையை பேரவையின் கவனத்துக்கு கொண்டு வந்து, அதன் மீது எதிர்தரப்பின் கருத்துக்களை அறிவது என்பது அரசியலமைப்பு சட்டம் கவர்னருக்கு வழங்கியுள்ள கடமையாகும். பேரவையில் உரையாற்றும் கவர்னருக்கு பேரவையின் வாயிலாக "நன்றி தெரிவிக்கும்" தீர்மானம் நிறைவேற்றி அவருக்கு அனுப்புவது அவை வழியாக கடைப்பிடித்து வரும் மரபாகும்.

இந்த வழக்காறுகளுக்கும், மரபுகளுக்கும் மாறாக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு, நடந்து கொண்டது போலவே இந்த ஆண்டும் அவையில் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகளின் உணர்வுகளையும் புறக்கணித்துள்ளார். கூட்டத் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவில் நாட்டுப்பண் இடம் பெறுவதும் நீண்ட பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் நல்மரபாகும்.

இதற்கு மாறாக கவர்னர் ஆர்.என்.ரவி, அரசுடன் இணைந்து தயாரித்த உரையை, வாசித்து பேரவைக்கு வழங்க மறுத்து அமர்ந்து விட்டதும், நாட்டுப்பண் இசைக்கும் முன்பு வெளியேறியதும் ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்