சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ்: தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-08-22 10:57 GMT

புதுடெல்லி,

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட பல இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஐகோர்ட்டின் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இந்த முறை தேனி போலீசார் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

இதற்கிடையே, சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம்கோர்டில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.

இதையடுத்து, குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து நேரடியாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இந்த நிலையில், சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு வழக்கின் விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்