ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1½ லட்சம் கனஅடியாக குறைந்தும் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

Update: 2022-08-06 17:35 GMT

பென்னாகரம்:

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1½ லட்சம் கனஅடியாக குறைந்தும் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

கனமழை

கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மெயின் அருவி, ஐந்தருவிகளை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனிடையே தமிழக- கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.80 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்

தொடர் வெள்ளப்பெருக்கு

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருந்தாலும் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் ஒகேனக்கல்லில் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்