ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

காவிரி ஆற்றில் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதால் 3-வது நாளாக ஒகேனக்கல்லில் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்தருவிகளை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

Update: 2022-07-13 16:25 GMT

பென்னாகரம்:

காவிரி ஆற்றில் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதால் 3-வது நாளாக ஒகேனக்கல்லில் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்தருவிகளை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

3-வது நாளாக வெள்ளப்பெருக்கு

இதனிடையே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருந்தாலும் ஒகேனக்கல்லில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்