தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாமக ஆட்சி நடைபெறும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேச்சு

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Update: 2023-09-16 18:45 GMT

பண்ருட்டி, 

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி, பண்ருட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் நடந்தது. இதற்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் கோ.ஜெகன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து.வைத்திலிங்கம் வரவேற்றார். மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, தங்க.அய்யாசாமி, மாநில அமைப்பு தலைவர் பழ.தாமரைக்கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வேங்கை சேகர், சக்திவேல், அமைப்புச்செயலாளர் கயல்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ம.க. ஆட்சி

கடலூர் மாவட்டம் என்றாலே பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை ஆகும். நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு, மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதில் மிகப்பெரிய வெற்றியை பாம.க. பெற வேண்டும். அதற்கான வேலைகளை நாம் தொடங்க வேண்டும். பா.ம.க.வில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். மற்ற கட்சிகளில் இளைஞர்கள் அதிக அளவில் இல்லை. பா.ம.க.வின் முக்கியமான இலக்கு. 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி நடைபெறும். அதற்கு முன்னோட்டம் தான் 2024-ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தல்.

கடலூர் மாவட்ட மக்களுக்காக பா.ம.க. எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறது. இந்த மாவட்டத்தின் முதன்மை பிரச்சினை என்.எல்.சி. இங்கு நிலத்தடி நீர் 1200 அடிக்கு போய்விட்டது. என்.எல்.சி. மின்சாரம் இனி நமக்கு வேண்டாம். முந்திரி விலை வீழ்ச்சி அடைந்து விட்டது. காரணம் தற்போதைய தி.மு.க. எம்.பி. தான். அவர் மடகாஸ்கரில் இருந்து முந்திரியை இறக்குமதி செய்கிறார்.

இங்குள்ள மக்களை பாதுகாப்பது பா.ம.க. தான். மற்ற கட்சிகள் அடையாளத்திற்கும், சந்தர்ப்பத்திற்கும் அரசியல் பண்ணக்கூடியது. தமிழகத்தில் பெண்கள் வாக்குதான் அதிகம். அவர்களின் மனநிலையில் மாற்றம் வந்துள்ளது.

கடலூர் எம்.பி. தொகுதியில் பா.ம.க. வெல்லும். பாட்டாளி மக்களின் கட்சிகளின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள். உறுதியாக வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஞானவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்