"அன்புள்ள அப்பா.. அப்பா.. யாருமே உன்போல் இல்லை" - மறைந்த தந்தைக்கு கோவில் கட்டிய பாச மகன்...!

'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் ஔவையின் வாக்கில் எவ்வளவு உண்மை. உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது.

Update: 2023-01-31 03:49 GMT

தஞ்சாவூர்,

அன்னை தன் வயிற்றில் பத்து மாதங்கள் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. அப்பா என்ற வார்த்தையில் தான் எத்தனை மந்திரங்கள். தந்தை என்பவர் ஆயிரம் ஆசான்களுக்கு சமம். தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள்.

'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் ஔவையின் வாக்கில் எவ்வளவு உண்மை. உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது. ஒவ்வொரு குழந்தையின் முதல் கதாநாயகன் தனது தந்தையாகத்தான் இருக்க முடியும். பல தந்தைகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறார்கள், சில தந்தைகள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாகிப் போகிறார்கள்.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் பகுதியை சேர்ந்தவர் தார்சியூஸ். சிறு வயதிலிருந்தே தார்சியூசுக்கு தனது தந்தை குழந்தை சாமி மீது அளவு கடந்த பாசம் இருந்து வந்துள்ளது. தந்தை மீது வைத்த அளவுகடந்த பாசத்தினால், அவரின் மறைவுக்கு பிறகு குழந்தை சாமியின் நினைவாக அவரது விவசாய பண்ணையில் அவருக்கு கோவில் கட்டி சிலை வைத்துள்ளார். இந்த கோவிலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் திறந்து வைத்தார்.

தந்தை மீதான இவரின் பாசம் ஊர் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மறைந்த தந்தைக்கு மகன் கோவில் கட்டிய சம்பவம் பரவியதையடுத்து பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இவரது தோட்டத்தில் கட்டியுள்ள தந்தையரின் கோவிலை பார்த்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்