சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய உதயத்தை காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2022-12-03 18:45 GMT

கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய உதயத்தை காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

அய்யப்ப பக்தர்கள் சீசன்

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

தற்போது அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் கன்னியாகுமரியில் சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண திரண்டிருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

விவேகானந்தர் மண்டபம்

தொடர்ந்து அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் படகு துறையில் நீண்ட நேரம் காத்திருந்து படகில் சென்று கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உட்பட அனைத்து இடங்களிலும் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரியில் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் உள்ள வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்