சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் படகுதளத்தில் நீண்ட நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றனர்.

Update: 2022-08-07 21:20 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் படகுதளத்தில் நீண்ட நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றனர்.

சுற்றுலா தலம்

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண காத்திருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை.

அத்துடன் காலை நேரத்தில் மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள். அதனைத்தொடர்ந்து பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

விவேகானந்தர் மண்டபம்

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் குவிந்தனர். அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரையில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்