குற்றாலம் சாரல் திருவிழா: பழமை வாய்ந்த கார்கள் கண்காட்சி

குற்றாலம் சாரல் திருவிழாவின் நிறைவு நாளான இன்று பழமை வாய்ந்த கார்களின் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது.

Update: 2022-08-12 09:26 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலர் மற்றும் பழக்கண்காட்சி, நாய் கண்காட்சி, கோலப்போட்டி, கொழு கொழு குழந்தை போட்டி, ஆணழகன் போட்டி, படகுப்போட்டி, யோகா போட்டி ஆகியனவும் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று இரவு மதுரை முத்து குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நிறைவு நாளான இன்று குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் திருப்பதியில் உள்ள ஜமீன் பங்களா வளாகத்தில் பழமை வாய்ந்த கார்களின் கண்காட்சி நடைபெற்றது.


இந்த கண்காட்சியில் 33 பழமை வாய்ந்தகார்கள் இடம்பெற்றிருந்தன. அதனை தொடர்ந்து இவற்றின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பினை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த அணிவகுப்பு கண்காட்சியிலிருந்து புறப்பட்டு குற்றாலம் அண்ணா சிலை, காசிமேஜர்புரம், ராமாலயம் வழியாக வந்து மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்