சீன நாட்டு தூதர் மாமல்லபுரம் வருகை: புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்

மாமல்லபுரம் வந்த சீன நாட்டு தூதர் புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்.

Update: 2022-06-03 13:24 GMT

இந்தியாவுக்கான சீன நாட்டு தூதர் சன் விதாங் தலைமையில் அந்த நாட்டு தூதரக அதிகாரிகள் 5 பேர் மாமல்லபுரத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சுற்றுலா வந்தனர். முன்னதாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதிக்கு வந்த சீன நாட்டு தூதர் சன் விதாங் மற்றும் அவருடன் வந்த தூதரக அதிகாரிகளை மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி ராஜாராமன் வரவேற்றார். பின்னர் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் பார்த்து ரசித்தனர். கடற்கரை கோவிலின் இரு கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டனர்.

கடற்கரை கோவில் வளாகத்தில் முன் பகுதியில் உள்ள மாமல்லபுரம் துறைமுக பட்டினமாக இருந்ததற்காக சான்றான படகு துறை, அகழி பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். கடற்கரை கோவில் அனைத்து சிற்பங்களையும் ரசித்து பார்த்த அந்நாட்டு தூதர் மற்றும் அவருடன் வந்த தூதரக அதிகாரிகள் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

குறிப்பாக மாமல்லபுரம் வந்த போது தங்கள் நாட்டு அதிபர் ஜின்பிங் நின்று புகைப்படம் எடுத்த வெண்ணை உருண்டைக்கல் பகுதியில் அதே இடத்தில் நின்று சீன தூதர் புகைப்படம் எடுத்து கொண்டார். சீன நாட்டு தூதர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்