சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உடன் முன்னாள் எம்.பி., மைத்ரேயன் சந்திப்பு

சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வதை முன்னாள் எம்.பி., மைத்ரேயன் நேரில் சந்தித்தார்.

Update: 2022-06-16 18:30 GMT

சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுந்தது ஏன் என்று எனக்கே தெரியவில்லை. எந்த அதிகார ஆசையும் எனக்கு இல்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்ற புதிய பிரச்சினையை உருவாக்கியவர் அதிமுக நிர்வாகி மூர்த்தி.

என்னையும், தொண்டர்களையும் பிரிக்க முடியாது. எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை தேவையா?. நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றை தலைமை குறித்து பேசியது இல்லை. பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவிற்கு கொடுத்த பதவியில் வேறு யாரும் வரக்கூடாது.

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு பொதுக்குழுவில் வைக்க வேண்டும் என்ற மரபுக்காகவே கூட்டம் நடத்தினோம். பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை

ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என முடிவு செய்திருந்தோம். மீண்டும் ஒற்றை தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன். இருவரும் இணைந்தபோது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை. தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன்.

14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு ஈபிஎஸ் உடன்பட வேண்டும். சசிகலா விவகாரத்தில் தலைமை நிர்வாகிகளே முடிவு செய்வார்கள். தொண்டர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கக் கூடாது என்பது எனது நோக்கம். ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது. அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவது அதிமுக மட்டுமே" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் எம்.பி., மைத்ரேயன் நேரில் சந்தித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்